நான் ஒரு சமூக மனிதன் : பா.செயப்பிரகாசம் நேர்காணல்




ன் மக்களையும் மண்ணையும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியமாக்கி வருபவர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். ஒரு ஜெருசலேம், காடு, கிராமத்து ராத்திரிகள், இரவுகள் உடையும், மூன்றாவது முகம், புதியன, இரவு மழை, புயலுள்ள நதி, பூத உலா ஆகியவை இவரது சிறுகதைத் தொகுதிகள். இவரது கதைகள் அனைத்தும் ‘பா.செயப்பிரகாசம் சிறுகதைகள்’ எனும் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தெக்கத்தி ஆத்மாக்கள், வனத்தின் குரல், கிராமங்களின் கதை, நதிக்கரை மயானம் - கவிதைத் தொகுதிகள்; சோசலிசக் கவிதைகள், இரத்த சாட்சிகள், அவசரநிலை ஆகிய மூன்றும் இவர் தொகுத்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுதிகள். இத்தொகுதிகளில் இவரது மொழிபெயர்ப்பு கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. களப்பணியாளர், பத்திரிகையாளர், பேச்சாளர் எனப் பல்வேறு தளங்களில் செயல்படும் இவர் ‘சூரியதீபன்’ என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.

நீங்கள் பிறந்த ஊர், குடும்பச் சூழல்... இவற்றினூடாக ஒரு கதைக்காரராக எவ்வாறு பரிணமித்தீர்கள்?

மதுரைக்குத் தென்புற வட்டாரம் எல்லாவற்றையும் ‘கரிசல் சீமை’ என்பார்கள். கரிசல் சீமையிலே முன்பு திருநெல்வேலி மாவட்டம் (இப்போது தூத்துக்குடி மாவட்டம்) இராமச்சந்திராபுரம்தான் நான் பிறந்த ஊர். பாரதி பிறந்த எட்டயபுரத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரம். அப்பா சாதாரண விவசாயி. என்னோடு பிறந்தவர்கள் மூன்று பேர். ஓர் அண்ணன்; இரண்டு தங்கைகள். கடைசித் தங்கை பால்குடி குழந்தையாக இருக்கிறபோது தாயார் இறந்துவிட்டார். அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது. அம்மாவைப் பெற்ற பாட்டிதான் எங்களை வளர்த்தார். சிறு வயதிலேயே மாடு மேய்த்திருக்கிறேன். சாணி பொறுக்கியிருக்கிறேன். கலப்பைப் பிடித்து உழுதிருக்கிறேன், களை பறித்திருக்கிறேன், புல்கட்டு சுமந்திருக்கிறேன், கதிர் அறுத்திருக்கிறேன், கம்மங்காட்டுக் காவல் காத்திருக்கிறேன். பள்ளிக் கூடம் போய்க்கொண்டே இவையெல்லாம் கூலிக்காக நான் செய்த வேலைகள். களை முளை காலத்தில் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் காணாமல் போய்விடுகிறார்கள். இதுதான் காரணம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்.

மானாவாரி புஞ்சை நிலங்களில் மழை பெய்தால்தான் விவசாயம். ஒவ்வொரு பருவத்துக்கும் சொல்லி வைத்ததுபோல் மழை பெய்யவேண்டும்; காற்றடிக்க வேண்டும். ஆனால், மழையும் காற்றும் அந்த வட்டாரத்தில் யார் கையிலும் கிடையாது. புஞ்சைக் காடுகளில் விவசாயம் என்பது வானத்துக்குக் கீழே நடக்கிற சூதாட்டம்தான். எங்கள் வட்டாரத்து சம்சாரி அனுபவத்திலிருந்து சொன்னால், ‘மழை பெஞ்சும் கெடுக்கும்; காஞ்சும் கெடுக்கும்’. மகசூல் முடிந்த கோடைக் காலத்தில்கூட சாப்பாட்டுக்கு வழி இருக்காது. கொளுத்துகிற சித்திரை மாத வெயிலிலே, தீ மாதிரி பற்றி எரிகிற புழுதியிலே கால்கள் பதிய மஞ்சனத்தி மரங்களிலே (நுணா) காய்களைப் பறித்து, மண்ணிலோ சாம்பலிலோ புதைத்து பழுக்க வைத்து, மறுநாள் காலையில் எடுத்துப் பசி ஆறுவோம்.

வேலை இல்லாத பெரும்பாலான நாட்களில் கதை சொல்லிக்கொண்டே காலத்தைக் கடத்துவார்கள். அதனால் கதை கேட்பதென்பது இளம் வயது முதலே எனக்கு இயல்பான விசயமாகிவிட்டது. பள்ளிப் படிப்பிலே முதன்மையானவனாக இருந்தேன். நிறையப் பரிசுகள் வாங்கினேன். எங்கள் பள்ளியில் அப்போதுதான் நூலகம் உருவாகி இருந்தது. அங்கு இருந்த புத்தகங்களையும் வாசித்தேன்.

பிறகு எங்கள் கிராமத்தில் ஒருவர் கல்கியின் பொன்னியின் செல்வனை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் ஓர் உடல் நோயாளி; கொஞ்சம் மனநோயாளி. வசதிகளின் உச்சத்தில் அவர் குடும்பம் இருந்ததால் உடலையும் மனதையும் தேற்றுவ தற்கு அவருக்கு கல்கி, ஆனந்த விகடன் எல்லாம் வரவழைக்கப் பட்டன. அவற்றில் வந்த கொடர்கதைகளெல்லாம் பைண்ட் செய்யப்பட்டன. அவற்றை எல்லாம் அவ்வப்போது வாங்கி வந்து படித்தேன். தி-.மு.க.வின் தீவிர தொண்டர் ஒருவர், பெயர் சீதாராமன். அவர் ஒரு படிப்பகம் மாதிரி. அவரிடமிருந்து பொன்னி, கலை மன்றம், திராவிட நாடு, முரசொலி இதழ் களையும், மலர்களையும் வாங்கி வாசித்தேன். கல்லூரிப் படிப்பில் நுழைவு வகுப்பில் (பியூசி) தடுமாறி தோல்வியுற்ற போது, இலக்கிய வாசிப்பு எனக்குத் தவிர்க்க முடியாததாகி விட்டது. அப்போது நாங்கள் மதுரைக்கு வந்திருந்தோம். மதுரை மேலமாசி வீதி மத்திய நூலகமே எனது வீடும் கூடுமானது.

வாசிப்பு எப்போதும் சலனமற்றிருப்பதில்லை. ஒரு தாவலில் அது படைப்பு உயரத்துக்குப் போகும். இந்த உயரம் தாண்டுதலை பிரக்ஞையோடு செய்பவர் எழுத்தாளர் ஆகிறார். அப்படித்தான் நானும் எழுத்தாளர் ஆனேன். 1959இல் நான் எனது கிராமத் திலிருந்து மதுரைக்கு வந்திருந்த சமயம். அப்போதுதான் முதன் முதலாக தண்டவாளத்தையும் ரயிலையும் பார்க்கிறேன். காலில் செருப்பு இல்லாமல் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் பொசுக்கும் தண்டவாளங்களில் கூட்டாளி களோடு கைகோர்த்துக் கொண்டு காலையில் ஒரு முறையும், திரும்புகாலில் ஒரு முறையுமாக, சில நாட்களில் மதிய வெயிலில் பள்ளிக்கூடத்துக்கு ஓடுவேன். ரயில் நிலையத்தின் முன்னால் இடது பக்கம் உள்ள பள்ளியில்தான் படித்தேன். தண்டவாளங் களில் நடந்து பள்ளிக்கூடம் போகிறபோது தினந்தோறும் நான் சந்திக்கிற ரயில்வே கேட்கீப்பர் ராமசாமிதான் என் ‘குற்றம்’ கதையின் நாயகன். அவர் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பள்ளத்தில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு பாகலும், புடலையும், பூசணியும் விளைவித்திருந்தார். எனது கதையில் அதை நெற்கதிராக மாற்றினேன். அங்கு நெற்கதிர்களைப் பயிரிட்டது குற்ற மென்று மேலதிகாரியின் ஆட்கள், அறுவடை செய்து குவித்த நெல்மூட்டைகளை அள்ளிக்கொண்டு போவார்கள். ராமசாமி தனது மகளுக்கு மூக்குத்தியும் நகையும் வாங்கிப்போட வேண்டும் என்பதற்காகத்தான் ஆசை ஆசையாக அந்தப் பயிரை விளைவித்திருப்பார். ஆனால், அது குற்றம் என்று அதிகாரிகள் அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். “இந்த முறையும் உனக்கு நகை கிடையாது. அடுத்த பருவத்தில் செய்யலாம் மகளே என்று உடல் நடுங்கியபடி தந்தை சொன்ன மொழி மகளுக்குப் புரியவில்லை’’ என்று அந்தக் கதை முடியும். அப்போது தி.க.சி. இளம் எழுத்தாளர்களின் கதைகளை யெல்லாம் ‘தாமரை’யில் வெளியிட்டு வந்தார். அதனால் இந்தக் கதையை அவருக்கு அனுப்பினேன். உடனே ‘தாமரை’ இதழில் வெளியிட்டார்.

‘குற்றம்’ கதையிலே, கேட்கீப்பர் ராமசாமியிடம் ஆலைத் தொழிலாளி, “அண்ணே, இது பணக்கார இடத்திலே இருந்து ஓடிவருகிற நச்சுத்தண்ணி. பல பேருடைய உயிரைக் கருக்கி சாம்பல் மேடாக்கிய கதை உண்டு. நமக்கு அது வேண்டாம்’’ என்பார். முதல் கதையிலேயே ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வை உரத்துப் பேசியிருக்கிறீர்கள். அதிகார வர்க்கத்தின் அத்துமீறலையும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். இப்படியான சமூக அக்கறை எவ்வாறு உங்களுக்குள் உருவானது?

பா.செயப்பிரகாசம் நூல்கள்


நான் அடிப்படையில் ஒண்ணுக்கும் வக்கில்லாத ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். மேனத்தான வாழ்க்கை எனக்குத் தெரியாது. மதுரைக்கு வருகிறபோது ஓர் ஆலைத் தொழிலாளி குடும்பம். என் சின்னையா (சித்தப்பா) மதுரையில் ஆலையில் வேலை பார்த்தார். வறுமையின் கிடுக்கிப் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுத் திணறிய குடும்பம். அதற்குள்ளிருந்துதான் எனக்கும் சுவாசக்காற்றை எடுத்துக் கொண்டேன். இதன் காரணமாகச் சமூகத்தின் அநீதிகளை, மற்ற மற்ற கொடுமைகளை எதிர்க்கிற மனப்போக்கு இயல்பாகவே விளைந்தது. ஆகவே, ஒரு சமூகப் போராளியாக உருவாகுவது என்பது மாணவப் பருவத்திலேயே எனக்கு நிகழ்ந்துவிட்டது. பிறகு, இலக்கியத்தில் இயங்கும் போதுகூட நான் ஒரு சமூக மனிதன் என்ற அடிப்படையில்தான் இயங்க ஆரம்பித்தேன்.

உங்கள் சிறுகதைகளில் ‘அம்பலக்காரர் வீடு’ கதையை மிக முக்கியமான கதையாகக் கூறுகிறார்கள். உங்களுக்கு முக்கியமாகப் படுகிற உங்கள் கதை?

பா.செயப்பிரகாசம் நூல்கள்

சரஸ்வதி மரணம், கரிசலின் இருள்கள், கோயில் மாடு, ஆறு நரகங்கள், எதையும் செய்வீர், காற்றில்லா கூடுகள், பூத உலா என நிறையக் கதைகள். நிலமானிய கட்டுமானத்தின் உடைவு பண்பாட்டுச் சிதைவுகளாக வாழ்வியலில் வெளிப்படுகிறது. அந்தக் கதைதான் ‘அம்பலக்காரர் வீடு’ போன்ற பெரும் பாலான தொடக்க கால கதைகள். நவீனப் பார்வைகள் உள்ளிறங்குகிறபோது ஏற்படுத்துகிற அதிர்வுகள், பற்பல நுகர்வு கலாச்சாரம் பற்றிய கதை ‘எதையும் செய்வீர்’. சூரியன் உதிக்கும் கிராமம், நெருப்பு வெள்ளமும் சைதான் களும், வளரும் நிறங்கள் போன்ற கதைகள் புரட்சிகர உள்ளடக்கம் கொண்டவை. பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை ‘இரவுகள் உடையும்’, ‘கோயில் மாடு’ போன்ற சில கதைகள். ஒரு ஜெருசலேம், பறவைகள்,

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கரிசலின் இருள்கள், காடு போன்றவை என்னுடைய தொடக்க கால கதைகள். அவை எனது பால்ய கால அல்லது சிறு வயது அனுபவம். உளவியல் சம்பந்தமான வெளிப்பாடு. தலித்திய சிந்தனையுடன் தாலியில் பூச்சூடியவர்கள், சாதி, புதியன தொகுதியில் உள்ள பல கதைகள். இப்படி தனித் தனியாக பிரித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

கரிசல் எழுத்தாளர்களில் உங்களின் தனித்துவம் பற்றிய உங்களின் அபிப்ராயம்?

முதலாவதாக, சமூக அக்கறை கொண்ட விசயத் தேர்வு. இரண்டாவதாக எனது சொல்முறை. நான் கைக்கொண்டது கவித்துவத்துடன் கதை சொல்லும் முறை. பாத்திரங்களின் உரை யாடல், ஒருவர் மற்றவரைப் பற்றிக்கொள்ளும் எண்ண ஓட்டம். இவை வாய்மொழி மரபில், என் ஜனங்களின் இயல்பான பேச்சு மொழியில் இருக்கும். பிற பகுதிகள், ஆசிரிய மொழியில் இருக்கும். இந்த இடங்களில்தான் கவித்துவம் கொண்ட கலை நயம் கொழுத்த சொல்லாடல் எடுத்துரைப்பு கையாளப்படு கிறது. இது அதிகப் படியாக வெளிப்பட்டுள்ளது என்ற விமர்சன மும் உண்டு. கி.ராஜநாராயணன் எழுத்துகள் அப்படியானதல்ல. அவரது கைச்சமையலில் காரம், உப்பு, புளிப்பு, உவர்ப்பு சமமாக இருக்கும். ஒரு துளிகூட குறையாமல் வட்டார மொழி அமையும். பூமணி வட்டார மொழிப்பாங்கு எவ்வளவு உண்டோ அவ்வளவையும் காட்ட முயலுகிற மாயாஜாலக்காரர். அவர் ‘வலதுல கொடுத்து இடதுல வாங்கிடுவாள்’ என்று பேச்சு சாதுரியம் கைவந்த பெண்டுகளைப் பற்றி கிராமங்களில் சொல் வார்கள். பூமணியும் வட்டார மொழிக்கு உள்ளே புகுந்து வெளியே வந்து வெளுத்து வாங்குவார்.


சோ.தர்மன் கரிசல் காடு தந்த நல்ல விளைச்சல். அவருடைய படைப்புகளில் வட்டார மொழி வலியப் பிசைந்து தரப்படுகிறது போல தோற்றம் தென்படும். ஆனால், அளவாக ஆட்கொள்வார். எனக்கு ரொம்ப பிரியமான படைப்பாளி ச.தமிழ்ச்செல்வன். இவரது எடுத்துரைப்பு முறை வட்டாரச் சாயலா, தனதா என்று வித்தியாசம் தெரியாமல் இயல்பாக இருக்கும்.

கவித்துவமான, கலைநயம் கொழுத்த நடையை எவ்விதமாக தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்?

நான் புதுமுக வகுப்பு தோல்வியுற்று ஓராண்டு நூலகமே கதி எனக் கிடந்தேன் என்று சொன்னேனல்லவா, அப்போது தமிழில் வந்த படைப்புகளைக் காட்டிலும், மொழியாக்கங் களையே அதிகம் வாசித்தேன். உரைநடையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும் எல்லா வற்றிற்கும் கவித்துவமான வரிகளை அதிகம் நேசிப்பேன். உதாரணமாக, நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில், “அந்தச் சிறைச்சாலைக்கு வெளியே இருக்கிற பொட்டல் வெளியில் ஒரே ஒரு புல் மட்டும் அதிசயத்தோடு இந்த இடத்திலா நாம் முளைத்திருக்கிறோம் என்று வியப்போடு பார்ப்பதாக’’ எழுதியிருப்பார். ஒரு புல் காற்றில் ஆடுவதை அவர் அவ்வாறு குறிப்பிடுவார். பொற்றைகாட் ஒரு கதையில், “மூன்று எழுத்தில் ஒரு கவிதை உண்டு. அது காதல்’ என்று எழுதியிருப்பார். இப்படியான கவித்துவ வரிகள் என்னை ஈர்த்தன. ஒரு கட்டத்தில், கலில் ஜிப்ரான் தத்துவார்த்தமாக கவித்து வத்தோடு எழுதியதுபோல, நானும் கல்லூரி நாட்களில் எழுதிப் பார்த்ததுண்டு. இவை யெல்லாம் உருக்கொண்ட பிறகுதான் என் முதல் கதையை எழுதினேன். அந்தக் கதையின் கவித்துவ நடையை தி.க.சி., சேலம் தமிழ்நாடன், என் மதுரை நண்பர் பாண்டியன் போன்றோர் பாராட்டி எழுதினார்கள்.

பா.செயப்பிரகாசம் நூல்கள்

‘மூன்றாம் பிறையின் மரணம்’ கதையின் கடைசிக் காட்சியில் அரிசிச் சோறு கிடைக்காததால், அந்தச் சிறுவன் இறந்துபோன பிறகு கையிலே அரிசிச் சோற்றை வைத்து இடு காட்டிலே புதைப்பார்கள். அதுபற்றி எழுதுகிறபோது ‘ஒரு நிலா, கைக்குள்ளே ஒரு நிலாவை வைத்துக்கொண்டு தூங்குவது போல இருந்தது’ என்று எழுதியிருப்பேன். அதனை புவியரசு மிகவும் சிலாகித்து, ‘அற்புதமான வரிகள்’ என்று கூறினார். எனது முதல் கதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கி.ராஜநாராயணன், ‘இவ்வளவு கவித்துவமாக எனக்கு எழுத வரமாட்டேங்கிறதே’ என்று குறிப்பிட்டிருந்தார். இத்தகைய ஊக்கப்படுத்தல்கள் எல்லாமே எனக்கு அதிலே மேலும் மேலும் நடை போடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்து வந்தது. அதனாலேயே அந்த மொழி நடையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். என் படைப்புகளை மனசளவில் மறுவாசிப்பு செய்து பார்க்கிறேன். அது உண்மை. இயற்கையோடு கலந்த எனது வாழ்க்கை அங்குள்ள மக்கள் விதைப்பு முதல் வெள்ளாமை வரை, இயற்கையை நேசித்து கட்டுப்பட்டு, பொருந்தி வாழ்தல் இவையெல்லாம நானறியாமலே தன்னியல்பாகவே வெளிப்பட்டுள்ளன. இப்படி பார்க்கிறபோது, எனக்கே அது அதிசயமாகத்தான் இருக்கிறது.

அந்தப் புஞ்சைப் பறவைகளின் வாழ்க்கையும் இயற்கை யோடு பிணைப்புண்ட அசைவுகளுமாக தன் உஷாரோடும் தன் உஷார் இல்லாமலும் என் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. தன் உஷார் இல்லாமல் என்பதற்கு என்னுடைய வாசிப்பும் வாழ்வும் அதன் இயல்பாக ஆகிவிட்டதால், எனக்குத் தெரியா மலே வெளிவந்தன என்பதாகப் பொருள்படும்.

‘எதையும் செய்வீர்’, ‘பூத உலா’ போன்ற சில கதைகளை வித்தியாசமான முறையில் எழுதியிருக்கிறீர்கள். சோதனை முயற்சியா?

பொதுவாகவே, பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. சக எதார்த்த எழுத்தாளர்களைப் போல இயல்பாக தன் போக்கிலே எழுதிக்கொண்டு போகவே விரும்புகிறேன். பரிசோதனை என்ற பெயரிலே அழகியல் அத்துமீறல்கள் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. அழகியல் என்பது ஒரு கருத்தியலை வெளிப்படுத்துவதற்காக உண்டாவது. அந்தக் கருத்தியல்களுக்குள்ளேயே அழகியல் உள்ளடங்கி இருக்க வேண்டும். ஆனால், சோதனை முயற்சி என்ற பெயரிலே ஆதீத அழகியலை அவர்கள் கைக்கொள்கிறார்கள். அது அழகான பரு மாதிரியோ, மச்சம் மாதிரியோ இல்லாமல் சிலந்திக்கட்டி மாதிரி இருக்கிறது.

பஞ்சாபிக் கவிதை ஒன்று, மிண்டர் என்பவர் எழுதியது. வன்முறை எங்கிருந்து விதை போடப்படுகிறது, எப்படி விளைச் சலாகிறது, எல்லா வன்முறைக்கும் மூலம் அரச பயங்கரவாதம் தான் என அந்தக் கவிதை பேசும்.

“என் தோள்களில்
ஒரு போர்வை இருந்தது
என் கைகளில்
ஒரு புல்லாங்குழல் இருந்தது;
நான் எங்கும் செல்லவில்லை
ஏதொன்றும் செய்யவில்லை
என் தோள்களிலே
துப்பாக்கி வந்தது எப்படி?
கரங்களிலே பிணங்களைத் தந்தது யார்?’’

ஆதிக்க சக்திகள்தான் வன்முறையை விதைக்கிறார்கள் என்பதுதான் அந்தக் கவிதையின் அடிப்படை.

ஈழத்து சிதைந்து போன வாழ்வு பற்றிய அன்றன் அன்பழ கனின் ஒரு கவிதை:

“முற்றத்தில் படர்ந்திருந்த
நெருஞ்சியின் சாம்பலை
அள்ளிச் சென்றது காற்று;
அச்சம் துறந்த ஆட்காட்டிகளின்
பாடலில் நிரம்பி வழிந்தன வெளிகள்’’.

இப்படி எந்தப் பிரச்சினையையும் அழகியலோடு சொல்ல முடியும். அதீத அழகியல் தேவையில்லை என்பது என் கருத்து. அகநிலையோ, புறநிலையோ எந்தச் சித்தரிப்பாக இருந்தாலும்.

கலைப் படைப்புக்கும் சித்தாத்தத்துக்குமிடையேயான உறவை எப்படி உள்வாங்கிக் கொள்வது?

படைப்பு என்பது சித்தாந்தம் அல்ல. ஆனால், சித்தாந்தம் இல்லாமலும் படைப்பு இல்லை. சித்தாந்தத்தை ஊடுகோடாகக் கொண்டு கலையாகப் படைப்பு வெளிப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். சித்தாந்தம்தான் சமுதாயப் பார்வை. எனவே, தனக்கென ஒரு சமுதாயப் பார்வை இல்லாத எந்தக் கலைஞனும் இல்லை. ஆனால், சித்தாந்தத்தை அப்படியே பிரதியெடுத்துத் தருவதாக ஒரு கலைப் படைப்பு இருக்க முடியாது; இருக்கக் கூடாது. அதை ஒரு கட்டுரையில் வெளிப்படுத்திவிட்டு போகலாம். கதை, நாவல், கவிதை, நாடகம் என்று பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறபோது அது அதற்குரிய கலை விதிகளை முழு மையாக நிறைவு செய்யவேண்டும். எனது தொடக்க கால ஒரு செருசலேம், காடு, கிராமத்து ராத்திரிகள் ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகள் வெளியானபோது மனித நேயம் என்ற சமுதாயப் பார்வையில் ஓரளவுக்குக் கலையின் விதிகளை எட்டியவையாக தொட்டவையாக வெளிப்பட் டிருந்தன என்று கருதுகிறேன்.

புரட்சிகர இயக்கச் செயல்பாடு, சித்தாந்த ஈடுபாடு இந்த ஊடாட்டங்களின்போது கலைத்துவ முறைகளுக்கு முக்கியத் துவம் தரப்படாமல் கருத்தியலாக வெளிப்பட்டன. இரவுகள் உடையும், மூன்றாவது முகம் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் இவ்வகையிலானவை என்று கருதுகிறேன். இன்றைக்குச் சமூகம் சார்ந்த சிந்தனைகள் கலை, கலை சார்ந்த வெளிப்பாடுகள் இரண்டும் மேக்காப்பூட்டில் இணையாகச் செல்கின்றன என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை யாளர் என வேறு சில பரிமாணங்கள் இருக்கின்றன. அவை பற்றி?

சிறுகதைகள் மட்டுமே எனக்கு உகந்த எழுத்துப் பழக்கமாக இருந்தது. 1982ல் முதல் கவிதையை எழுதினேன். ‘பாரதி நடந்த தெரு’ என்பதுதான் நான் எழுதிய முதல் கவிதை. சென்னை திருவல்லிக்கேணி பகுதியிலே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன போது, இஸ்லாமியர்கள் மீது அவர்கள் நடத்திய வெறித் தாக்கு தல்கள் பற்றிய கவிதை அது. ’மனஓசை’யில் வெளிவந்தது. அதன் பிறகு அவ்வப்போது எழுதி வருகிறேன். கவிதை வாசிப்பு போல, கவித்துவ வரிகளின் நேசிப்புபோல, கவிதைகள் மொழி பெயர்ப்பும் எனக்குப் பிரியமானது. 1978லிருந்து 1992வரை 14 ஆண்டுகாலம் புரட்சிகர இயக் கத்தில் நேரடி செயல்பாட்டில் இருந்தேன்.

பா.செயப்பிரகாசம் நூல்கள்

‘மனஓசை’ இதழ் 1981ல் தொடங்கி 1991 வரை வெளிவந்தது. ஒரு பத்தாண்டு காலம் அதை இயக்குகிற பொறுப்பில் முக்கியப் பங்காற்றினேன். இயல்பாகவே சமூக விழிப்புணர்வு, சமூக மாற்றம் என்ற தேடலில் இருந்தபோது மார்க்சியம் என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது.

பா.செயப்பிரகாசம் நூல்கள்

1969, 70, 71 ஆண்டுகளில் இன்குலாப்பும் நானும் மார்க்சிய வட்டத் துக்குள் இருந்தோம். பிறகு இருவருமே புரட்சிகர இயக்கத் துக்குள் அடி யெடுத்து வைத்தோம். புரட்சிகர செயற்பாடுகள் பற்றி நான் எழுதிய பல கதைகள் ‘இரவுகள் உடையும்’ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ‘கிழக்கே உதிக்கும் சூரியன்’ மிக முக்கியமான கதை.

எந்தச் சூழலில் ‘சூரியதீபன்’ என்ற புனைபெயரை வைத்துக் கொண்டீர்கள்?

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நான் ஓர் இலக்கியவாதி என்பதன் அடையாளம் பா.செயப் பிரகாசம். நான் ஒரு சமூகப் போராளி என்பதன் அடையாளம் சூரியதீபன். இடதுசாரி சிந்தனையுடன் நான் எழுத ஆரம்பித்த போது உருக்கொண்டதுதான் சூரியதீபன் என்ற பெயர். இளவேனில் நடத்திய ‘கார்க்கி’ இதழில்தான் முதன் முதலில் சூரியதீபன் என்ற பெயரில் எழுதினேன்.

பா.செயப்பிரகாசம் நூல்கள்

தீவிர அரசியல் சூழலிலிருந்து எழுத்தாளர்கள் விலகி நிற்கிறார்களே... ஏன்?

காலகட்டம்தான் காரணம். காலகட்டம் சார்ந்துதான் இலக்கிய வெளிப்பாடும் இலக்கியவாதிகளும் இருக்கிறார்கள். வரலாற்றுப் போக்கில் சமுதாயத்தில் மேல்கீழ் அசைவுகள், புயல், சூழல் போன்றவை நிகழும்போது, அப்போது முன்னணியில் இருக்கிற ஒரு கோட்பாடு, ஓர் இயக்கம் வழிநடத்துகிறது. எடுத்துக்காட்டாக, இந்திய விடுதலைப் போராட்டம். அதன் தொடர்ச்சியாக மார்க்சிய இயக்கங்களின் பரிணாமம். இந்தக் காலகட்டங்களில் ஓர் எழுத்துக்காரன் இயக்கம் சார்ந்தோ அல்லது அந்த வீச்சுக்கு ஆட்படாமலோ இருக்கமுடியாது இங்கே மணிக்கொடி காலத்தில் கேரளத்தில் பொதுவுடைமை இயக்கங்கள் உச்சியில் இருந்தது. அப்போது அங்கே எழுத்தாளர்கள் ஒன்று நேரடியாக இயக்கத்துக்குள் இருந்து செயல்பட்டார்கள். அல்லது தகழி, கேசுவதேவ், பொன்.கொன்ன வர்த்தி, முட்டத்துவர்த்தி, பாரபுரத்து போன்று அந்தப் புதுக் காற்றின் வாசனையை நுகர்ந்துகொண்டே படைத்தார்கள். இன்றைக்கு அப்படியான ஒரு பேரெழுச்சிக்காலம் தமிழ்ச் சமூகத்தில் இல்லை. தமிழ்ச் சமூகத்தில் உள்ளதுதான் தமிழர் வாழ் வியலிலும் படைப்புகளிலும் வெளிப்படும். இயக்கங்கள் மீதோ, இயக்கங்கள் முன்வைக்கும் அரசியல் மீதோ இலக்கிய வாதிகளுக்கு நம்பிக்கை இல்லை. தேர்தலை முன்வைத்த செயல் பாடு மட்டுமே அரசியல் என்றாகிவிட்டது. ஆகவே, இன்றைய காலகட்ட அரசியலிலிருந்து எழுத்தாளர்கள் விலகி நிற்கிறார்கள். எனவே, எழுத்தில் வித்தியாசமானதை எழுத்து வகைகள் என்னென்ன உண்டோ, அவற்றை எல்லாம் கைப்படுத்தி கரணம் போடுவது இன்றைய இலக்கிய வெளிப்பாடாக இருக்கிறது. ஆனாலும், குமுறிக்கொண்டிருக்கிற வெப்பம் தகிக்கிற கால கட்டம்தான் இது. நொறுக்கப்பட்ட மக்களான தலித்துகளின் விடுதலை, அடிமைச் சமூகமாகவே வைக்கப்பட்டிருக்கிற பெண்களின் விடுதலை, அடித்தளத்து மக்களின் விடுதலை இவை யெல்லாம் காலத்தின் பிரச்சினைகளாக படைப்புகளாக முன் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை பேசப்படாதவை பேசப்படுகின்றன.

எந்தக் கருத்தியலிலும் நிலைக்காமல், எல்லா கருத்திய லையும் தேடிப்போவது... சாத்தியமா?

ஒரு படைப்பாளியின் ஆரம்ப கட்டத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து இயங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அது, கட்சி அரசியலின் கருத்தியலாக இருக்கணும் என்கிற அவசியம் இல்லை. மனிதம் சார்ந்த சமூக அக்கறை சார்ந்த கருத்தியலில் இருந்தாலே ஒரு படைப்பாளி தனது படைப்புகளை வளம் கொண்டதாக ஆக்க முடியும். ஆனால், எந்தக் கருத்தியலும் சாராத ஒரு தேடல் என்று சொல்லிக் கொள்வது சரியல்ல.

கிராமத்துக் கலைஞர்கள் பற்றி ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ எழுத நேர்ந்த சூழல்..?

தெக்கத்தி ஆத்மாக்கள்

அவர்கள் வித்தியாசமான மனிதர்கள். சிலர் தமது வித்தையில் வித்தகர்களாகவும் சிலர் நல்லவர்களாகவும் வட்டார வாழ்வுக்குள் கிடந்தவர்கள். என்னுடைய பால்ய காலம் முதல் எனக்குள் அனுபவமாக இறங்கி இருந்தார்கள். பால்ய காலம், இளவட்டப் பருவம், அதற்குப் பின்னான வாழ்க்கை யோடும் தற்போது வரை அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தேன். அற்புதமான குணங்களோடும் குணக்கேடு களோடும் எனக்குள் சேகாரமானார்கள். அந்தப் பிம்பங்களை இன்னும் தெளிவாக துலங்கிக் கொள்வதற்காக மறுபடியும் கிராமங்களுக்குப் பயணம் செய்தேன். முதலில் கலைஞர்களை மட்டுமே எடுத்துச் செய்ய வேண்டுமென்று நினைத்து, பிறகு வித்தியாசப்பட்ட குணச் சித்திரக்காரர்கள் வரை விரிவுபட்டுப் போனது. நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். கலைஞர்களின் கலைச் சேவையைவிட, அவர்களின் வாழ்க்கை சுவாரசிய மானது, சிறப்பாக ஒருவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். நாட்டுப்புறவியல் ஆய்வாளர், வட்டார பண்பாட்டு, மொழி, பாடல் சேகரிப்பாளர், தானறிந்த விசய ஞானத்தை மறைப்பில் லாமல் திறப்புச் செய்த தங்கம்மாள்புரம் அண்ணாச்சி எஸ்.எஸ். போத்தையா கொடுத்த போஷாக்கு இல்லாமல், ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ கொழுகொழு வென்று வந்திருக்கமாட்டார்கள்.

கரிசல் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கிராமமும் மக்களின் வாழ்க் கையும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறதா?

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நான் பழகிய, எனக்குள் இறங்கிய கரிசல் சீமை ரொம்ப மாறிக் கிடக்கிறது. புஞ்சைத் தானியங்களுக்குப் (நவதானியம்) பதில் வணிகப் பயிர் பருத்தி, கொத்தமல்லி என்று ஐம்பது வருசத்துக்கு முன் பயிரிட ஆரம்பித்தார்கள். இப்போது மிளகாய் படுபோடு போகிறது. சட்டி மிளகாய், குண்டு மிளகாய், பயறு வகைகளில் உளுந்து, பூவாணி (பாசிப்பயறு) முன்னெல்லாம் நிறைய. இப்போது பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு ஒரு சில இடங்களில் பயிறாகி நல்ல பிடி பிடிக்கிறது. விவசாயி வணிகப்பயிர் என்ற சூதாட்டத்தில் போய் மாட்டிக் கொண்டான். சரிவர வெள்ளாமை இல்லாதபோது சவளுகிறான்.

ஊரில் மாதச் சம்பளக்காரர்கள் என்ற புதிய வரத்து வந்துள்ளது. மனிதர்கள் நவநாகரிகமாக ஆகிப் போனார்கள். முன்பு பண்டமாற்று முறை இருந்தது. இப்போது, முன்காலம் போல உள்ளூரிலேயே விலையாக்கி தன்னுடைய தேவைக்கு வைத்துக்கொள்ள விவசாயி சம்மதிக்கவில்லை. எந்த விளைச்சல் என்றாலும் எடுத்துக்கொண்டு பக்கத்து நகரத்துக்கு ஓடுகிறான். கடந்த காலத்தில் நிலமானிய உடைமை முறைக்குள் அவனுக்குள் செயல்பட்ட கொஞ்ச நஞ்ச மனித குணங்களையும் எடுத்து வெளியே போட்டு விட்ட வணிக வெக்கை, அருங் குணங்களையெல்லாம் உணத்திப் (உலர்த்தி) போட்டுவிட்டது. அந்தக் குணக்கேடுகளும், குணநலன் களும் தெக்கத்தி ஆத்மாக்களில் அதிக வடிவு கொண்டுள்ளன.

நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா?

இரண்டு நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்று, அன்றைய கிராமம் எப்படி இருந்தது. இன்றைய கிராமம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியது. இரண்டாவது, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியது. இது கிட்டத்தட்ட எனது தன் வரலாறாக இருக்கும்.

சந்திப்பு : சூரியசந்திரன்

புதிய புத்தகம் பேசுது, 
ஜூலை 2004

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியம் முதல் பெண் கவிஞர்கள் : பத்மாவதி விவேகானந்தன் நேர்காணல்

எனது கதைகள் வரலாற்று ஆவணங்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி நேர்காணல்

கவிஞர் அறிவுமதி பாடலாசிரியரான கதை