ரோடும் ரோடு சார்ந்ததும் : ஆதவன் தீட்சண்யா நேர்காணல்

“தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கும் சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிறானே...
ஒண்ணு தெரிஞ்சிக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலே’’
- ஒரு கலகக்குரல், தமிழ் இலக்கிய உலகுக்குள், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓங்கி ஒலித்தது. அந்தக் குரலுக்குரியவர் தோழர் ஆதவன் தீட்சண்யா. இவரது எழுத்தில் தாங்கமாட்டாத நிஜத்தின் துயரம் தகிக்கும். சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எழுதியும் பேசியும் ஒரு பண்பாட்டு ஊழியராய் இயங்கி வருபவர்.
ஓசூரில், தொலைபேசித் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரை அங்கு சென்று சந்தித்து உரையாடினேன்.
உங்களின் பூர்வீகம், குடும்பச் சூழல். அதிலிருந்து ஒரு படைப்பாளியாக, பண்பாட்டு ஊழியராக உங்களின் வளர்ச்சி... இவை பற்றி...?
பொதுவாக அப்பாவின் ஊரைத்தான் சொந்த ஊர்னு சொல்கிற வழக்கப்படி எனக்குச் சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம். அப்பா சிறுபிள்ளையாய் இருக்கும்போதே எங்க தாத்தா இறந்து போயிடுறார். அதற்குப் பிறகு, எங்க பாட்டியின் அம்மா வீடான ஓமலூர் ஆர்.சி.செட்டிபட்டியில் செட்டுலாகுறாங்க. அந்த ஊரில் பெரும்பாலானவங்களுக்கு நிலம் கிடையாது. ரோடு போடுற ஜல்லி உடைக்கிற வேலைதான். சேலம் - அரூர் தார்ரோடு போடும்போது அங்கு என் பாட்டி மாரிமுத்தம்மாள் நிலம் வாங்கு றாங்க.
அரூரிலிருந்து கம்பைநல்லூர் ரோடு போடும்போது அந்த ரோட்டுக்கு மண்ணடிக்க வர்ற வண்டிக்காரர் ஈச்சம்பாடி முனுசாமி யோட மகள் ரத்தினம்மாவை தன் மகன் மாரியப்பனுக்கு கல்யாணம் முடிக்குது பாட்டி. இவங்கதான் என் பெற்றோர். 6.3.1964இல் நான் பிறந்தேன்.
இப்படி ரோடும் ரோடு சார்ந்த வாழ்க்கையும்தான் எங்களுடையது.
ஏழு பேரில் நான்தான் பெரியவன். ‘பிளஸ்டு டூ’ வரைக்கும் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்கூல்லதான் படிச்சேன். அதுக்குப் பிறகு தருமபுரி கலைக் கல்லூரியில் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். தருமபுரிங்கிறது சமூக ரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் ரொம்ப பின்தங்கின மனோபாவம் உள்ள இறுக்கமான ஒரு மாவட்டம். அங்கே கிராமங்கள்லேருந்து காலேஜ்க்குப் படிக்க வர்ற பசங்க சாதியையும்கூட சேர்த்துகிட்டுத்தான் வர்றாங்க. அப்போ ஹாஸ்டல்ல சாதிப் பிரச்சினை வந்துடுச்சி. காலேஜே ரெண்டா பிரிஞ்சிருக்கு. ரொம்ப சேதாரம். 144 தடை உத்தரவு போட்டிருந்தாங்க. அப்போ, ‘கமர்சியல் டாக்ஸ்’ துறையிலே சண்முகம்னு ஒரு தோழர். (அப்போ அரசு ஊழியர் சங்கம் ஆரம்பிக்கலே.) எங்க ஹாஸ்டலுக்குப் பக்கத்திலேதான் அவரோட குவார்ட்டர்ஸ். அவருக்கு ஏற்கனவே ஹாஸ்டல்ல இருக்கிற ரெண்டு பசங்களோட தொடர்பு இருக்கு. அவங்களைப் பார்க்க சண்முகம் அடிக்கடி வருவார். அவங்க அறைக்கு ஒரு நாள் நான் போகும்போது அங்கே சண்முகம் பேசிகிட்டு இருக்காரு. அவர் பேசுனது என்னை ரொம் பவும் பாதிச்சது. முடிவிலே “மாணவர்களெல்லாம் ஒற்றுமையா இருக்கணும்னு நீங்க ஏன் ஒரு அப்பீல் கொடுக்கக் கூடாது?’’ன்னார். அந்தக் கேள்வி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால ஏழு பேர் சேர்ந்து ஒரு நோட்டீஸ் போட்டோம். “மாணவர்கள் ஒற்றுமையாக இருக்கணும். சாதி உணர்வுகளைக் கடந்து வரணும். விஞ்ஞா னப்பூர்வமான கல்விக்காகப் போராட வேண்டிய மாணவர்கள் இப்படி சாதி விசயத்தை முன்னிலைப்படுத்தி அடிச்சிக்கிறதெல்லம் தேவையில்லை’’ன்னு ஒரு நோட்டீஸ் போட்டுட்டு ஒவ்வொரு அறையாக ஏறி இறங்கிக் கொடுத்தோம். அதுக்குப் பிறகு அந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துச்சு. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தோழர் சண்முகம் வீட்டுக்கு நான் அடிக்கடி போக ஆரம்பிச்சேன். அவர்கிட்டே நிறைய புத்தகங்கள் இருந்துச்சு. அதுவரை கார்ட்டூன் புத்தகங்கள், மாலைமதி மாதிரியான புத்தகங்களைத்தான் படிச் சிருக்கேன். ‘இலக்கியப் புத்தகங்கள்’னு ஒரு ஏரியா இருக்கிறதே எனக்கு அப்போது தெரியாது. சண்முகம்தான் முதன் முதலா ‘ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள்’னு தணிகைச் செல்வனுடைய கவிதைப் புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அது எனக்குப் பெரிய திறப்பு. அதுக்கு முன்னாடி சினிமாப் பாட்டுப் பாதிப்பிலே சின்ன சின்னதாக கிறுக்கிகிட்டிருந்தேன். கூடப் படிக்கிற பிள்ளைகளைக் கிண்டல் பண்ணி எழுதுறது, கற்பனையா ஒரு காதலியை நினைத்து ‘கண்ணே முக்கே’ன்னு எழுதுறது, இப்படி. இந்தப் புத்தகத்தைப் படிச்ச பிறகுதான் பிரச்சினைகளை வைச்சு கவிதை எழுதலாம்கிற விசயமே தெரிஞ்சது. அதுக்குப் பிறகு நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.
நான் பி.எஸ்.ஸி., முதலாமாண்டு படிக்கும்போதே ‘டெலிபோன் ஆபரேட்டர்’ வேலைக்கு தேர்வாகிட்டேன். அதனால ஹாஸ்டல்ல இருந்தேனே தவிர காலேஸ்க்குப் போறதேயில்லை. அப்போ ‘இந்திய மாணவர் சங்கம்’ ஆரம்பிச்சாச்சு. தீவிரமா வேலைகள் நடக்குது. மாணவர் சங்க மாநாட்டில் மாவட்ட துணைத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சிதம்பரத்தில் நடந்த மாநில மாநாட் டுக்குப் பிரதிநிதியாகப் போறேன்.
கோமல் சுவாமிநாதனை அழைத்து வந்து நாடகம் போடும் வே¬ல்களில் சண்முகத்தோடு சுற்றினேன். அப்போ ஏ.கே.கோபாலனின் ‘நான் என்றும் மக்கள் ஊழியனே’ புத்தகத்தை படிச்சுட்டு அந்தப் பாதிப்பிலே முழுநேர அரசியல் ஊழியனா ஆகணும்னு பிடிவாதமாக இருந்தேன். தோழர் ஹரிபட்கிட்டே போய் விருப்பத் தைச் சொன்னேன். அவர், “முழுநேர ஊழியனா இருந்துதான் மக்களுக்கு ஊழியஞ் செய்யணும்னு இல்லே. தொலைபேசித் துறையிலே இயந்திரம் மட்டும் இருக்காது; அங்கேயும் மனுசங்க இருப்பாங்க. தொழிற்சங்கங்கள் இருக்கு. அங்கே போய் வேலை செய்’’னு சொல்லி அனுப்பி வைச்சுட்டாரு. அதுக்குப் பிறகுதான் டிரெய்னிங் போனேன்.
1984 ஜூன்ல தேன்கனிக்கோட்டையிலே வேலைக்குச் சேர்ந் தேன் அங்கே நான் இருக்கும்போது ஓசூரில் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ மாநாடு நடக்குது. இவங்களோடு எனக்கு ஏற்கனவே தொடர்பு இருந்தது. ஒரு வீட்டு மொட்டை மாடியில் கவியரங்கம் நடக்கும். கவிஞர் வெண்மணி அப்போது திருவண்ணாமலையில் இருந்து அடிக்கடி வருவார். அவர் ஒருமுறை “நீங்களும் கவிதை வாசிக்கலாமே’’ன்னு சொன்னார். அப்போ, நம்மள வாசிக்கச் சொல்றாங்கன்னா நாம எழுதுறது கவிதைதான் என்கிற நம்பிக்கை வந்தது. அந்தத் தைரியத்தில் எதையாவது எழுதி கவியரங்கத்தில் வாசிக்கிறது வழக்கமாயிடுச்சு. இந்தக் கவியரங்க மனநிலையிலிருந்து விடுபட்டு எப்போ மாறினேங்கிறதை என்னால சரியா சொல்லத் தெரியல.
தோழர் வெண்மணி ‘அதிர்வுகள்’னு ஒரு பத்திரிகை நடத் தினார். முதல் இதழ் அட்டையில் கவிஞர் ஷெல்லியின் கவிதையை வெளியிட்டிருந்தார். இரண்டாவது இதழ் அட்டையில், என்னுடைய “வீசும் காற்றுக்கும் பாயும் ஆற்றுக்கும்’’ என்கிற கவிதையை வெளியிட்டிருந்தார். ‘தகடூர் ஆதவன்’னு பேர் வைத் ததும் அவர்தான். ஷெல்லிக்கு அடுத்தது நாமதான் என்கிற நினைப் பிலே தலை கால் தெரியாம திரிஞ்சேன். இந்தச் சூழல் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தைக் கொடுத்தது.
என் முதல் கதை ‘ஃப்ளாஷ்’ செம்மலரில் வெளியானது 1985ஆக இருக்கலாம். அப்போ தேன்கனிக்கோட்டையிலே இருந்தேன். ‘செம்மலர்’ நடத்திய சிறுகதைப் போடியில் என்னுடைய இரண்டாவது கதை ‘சிதைவுகள்’ பிரசுரத்துக்குத் தேர்வாகி பிரசுர மாச்சு.
1986ல் ஓசூருக்கு மாற்றல் வாங்கிட்டு வந்ததிலிருந்து 93 வரை முழுநேர தொழிற்சங்க வேலைதான். எங்க சங்கத்துக்கு நான்தான் மாவட்ட செயலாளர். மத்திய, மாநில பொதுத்துறை ஊழியர் கூட்டமைப்புக்கு செயலாளர். அப்போதுதான் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் கேட்டு மாநில அரசு ஊழியர்களின் போராட்டம் நடந்தது. ‘கே.ஜி.போஸ் இல்லம்’ என்கிற அன் அறை தான் அந்தப் போராட்டத்துக்கான அலுவலகம். சங்க வேலையா வெளியூர் பிரயாணம் போகையில் புத்தகம் வாசிக்கிறதை ஒரு பழக்கமா வைச்சிருந்தேன். இந்த வாசிப்பினால் வந்த வினையோ என்னவோ தொழிற்சங்கப் பணியைச் செய்றதுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே நாம ஏதாச்சும் வேறு வேலை பார்க்கலாம்னு அந்தப் பணியிலிருந்து ஒதுங்கிட்டேன். அதுக்குப் பிறகு எழுத்தாளர் சங்க வேலைகள். அதாவது, எழுதுறதும் இயங்குறதுமான வேலைகள்...
1993ல் மீனாவுடன் திருமணம். என்னுடைய ‘புறத்திருந்து’ முதல் கவிதைத் தொகுதியை ஓசூர் த-.மு.எ.ச. கிளை வெளியிட்டது. போப்பு, வினாயகம், பாலசுந்தரம் முன்முயற்சி எடுத்தாங்க. ‘புதிய பார்வை’யில் என்னுடைய நாலைந்து கவிதைகளும் கதைகளும் வெளிவந்தன ‘விரகமல்ல தனிமை’ கதைக்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசும்கூட கிடைத்தது.
உங்களுடைய முதல் கதை ‘ப்ளாஷ்’. அதுக்குப் பிறகான கதை ‘சிதைவுகள்’. இந்த இரண்டுமே செம்மலரில் வெளி வந்ததாகச் சொல்றீங்க. அந்தக் கதைகள் உங்கள் சிறுகதைத் தொகுதியிலே இல்லை. எப்படியான விசயங்களை முன் வைச்சு அந்தக் கதைகளை எழுதினீங்க...?
கல்யாண வீடுகள்ல போட்டோ பிடிக்கிறதுங்கிறது அப்போ ரொம்ப அபூர்வம். ரொம்ப வசதியானவங்களதான் போட்டோ எடுப்பாங்க. அப்படி நகரத்திலே நடக்கிற ஒரு விசேஷத்துக்கு கிராமத்திலேருந்து உறவுக்காரர் ஒருத்தர் கிளம்பி வர்றாரு. கிராமத்து மனோநிலையில் அவராவே வேலைகளை எடுத்துப் போட்டு செஞ்சிகிட்டிருக்காரு. தன்னை போட்டோ எடுப்பாங் கன்னும், போட்டோ எடுக்கும்போது வெளிச்சம் வந்ததும் கூச்சத்தில் கண்ணை மூடி ஏமாந்துடக் கூடாதுன்னும் ஜாக்ரதையா இருக்கார். இவர் போய் அண்டாவைக் கொடுத்துட்டு போட்டா எடுக்கிறதுக்காக கேமராவைப் பார்த்து நிற்கிறார். அந்த நேரம் பார்த்து வீட்டு ஆளுங்க, “என்னது, நீங்களும் போய் மசமசன்னு அங்க நின்னுகிட்டு, கீழ இறங்கி வாங்க, அடுத்தடுத்து ஆளுங்க வந்துகிட்டு இருக்காங்கள்ல’’ன்னு சட்டுன்னு போட்டோ எடுக் காமலே கீழ இறக்கி விட்டுடுறாங்க. போட்டோ எடுக்காத ஏமாத் தத்துலே இவருக்குக் கண்ணு கலங்க... அந்தக் கேமரா ‘பிளாஷ்’ மங்கலா தெரிஞ்சிகிட்டிருக்கு. அதுதான் அந்த ‘பிளாஷ்’ கதை.
‘சிதைவுகள்’ கதை, ஒரு சின்னப் பையனுக்குத் தாங்க முடியாத பசி. வீட்டிலே தின்கிறதுக்கு ஏதாவது கிடைக்குமான்னு அடுக் களையில் தேடுவான். கடைசியா, வீட்டு மொடாவுல கம்பு இருக்கும். சாப்பிட ஆரம்பிச்சிடுவான். பூச்சி அரிக்காம இருக்கிற துக்காக அந்தத் தானியத்திலே பூச்சிக்கொல்லி கலந்துருப்பாங்க. அதைத் தின்னதாலே நுரை தள்ளிக் கிடப்பான். அதுதான் அந்தக் கதை.
1996இல் உங்களது ‘புறத்திருந்து’ வருது. 2003இல் ‘பூஜ்யத் திலிருந்து தொடங்கும் ஆட்டம்’ வருது. முதல் தொகு திக்கும் இரண்டாவது தொகுதிக்கும் இடையிலே கவிதை யின் வடிவம், உள்ளடக்கம், அரசியல் எல்லாத்திலுமே வித்தியாசம் இருக்கு. என்ன காரணம்?
இடைப்பட்ட அந்த காலகட்டத்திலே நான் அம்பேத்கரை வாசிக்க ஆரம்பிச்சிருந்தேன். அதன் வழியாக, பல விசயங்கள் எனக்கு விளங்க வருது. இந்தியச் சமூகங்கிறது வர்க்கமாகத்தான் பிரிஞ்சிருக்குன்னு புரிஞ்சிகிட்டது இருக்குல்ல, அதிலே சில விசயங்களைச் சேர்க்கணும்கிற மாதிரி தோணுச்சி. இந்திய சமூகம் வர்க்கமாக இருந்ததா இல்லையாங்கிறதுக்கு முன்னாடியே அது சாதியா இருந்திருக்கு. அந்தச் சாதிங்கிறது வாழ்க்கையின் எல்லா விசயங்களிலேயும் தலையிடுது. எல்லா நேரத்திலேயும் வழி நடத்துது. சாதியை மறந்துட்டு, சாதியை கை விட்டுட்டு எந்த ஒரு தனி மனிதரும் எந்த ஒரு காரியத்திலும் இறங்குறதில்லை. ‘வேற்று மையில் ஒற்றுமை’ன்னு காலம் காலமா சொல்லிகிட்டு திரியிறாங்க. ஆனால் மொழியால, கலாசாரத்தால, உடையால, பண்பாட்டால, விழாக்களால... எதிலேயும் ஒண்ணுபோல இல்லை.
ஆனா, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்கும் ஒடுக் கிறவனெல்லாம் ஒண்ணு போலவும், ஒடுக்கப்படுறவனெல்லாம் ஒண்ணு போலவும் இருக்கான். வெளியிடங்களில் முன்னைப் போல சாதியைச் காட்டிக் கொள்வதில்லை, பேசுவதில்லை என் றாலும்கூட அவங்க சொந்த வாழ்க்கையிலே சாதியை விட்டுட்டு எதையும் பண்றதில்லை. இந்தப் புரிதல் என்பது அம்பேத்கரை வாசிச்சப் பிறகுதான் கிடைக்குது. சாதி என்பதுதான் இந்திய சமூகத்தை மிகப்பெரிய அளவுக்கு ஆட்கொண்டிருக்கிற விசயம். இதையெல்லாம் புரிஞ்சிகிட்டு, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வனாக மட்டுமல்ல, சாதியை மறுப்பவனாக என்னை எப்படி வெளிப்படுத்துறதுன்னு என்னுடைய சொந்த தவிப்பிலிருந்து யோசிக்கும்போது, அந்த அனுபவத்திலிருந்து எழுத ஆரம்பிச்சேன். அந்தக் கவிதைகள்தான் இரண்டாம் தொகுப்பில் இருக்கு. அது தான் முதல் தொகுப்புக்கும், இரண்டாம் தொகுப்புக்குமான வித்தி யாசமா உங்களுக்குத் தெரியுது.
நீங்கள் ஒரு பண்பாட்டு ஊழியரா இருக்கீங்க. சாதிய ஒடுக்கு முறைகளை இடதுசாரி இயக்கங்கள் எந்த வகையில் எதிர் கொண்டிருக்கின்றன?
ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கம்கிற வகையில் எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களோட, எல்லா சாதி பெண்களோட இயக்கமாத்தான் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் சாதி என்கிற விசயத்தை பொருட்படுத்தாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, என்னை இயக்கத்துக்கு கொண்டுவந்த சண்முகம் போன்ற தோழர்கள் சாதி என்கிற விசயத்துக்குள்ளேயே போகலை. சாதி என்பது ஒரு விவாதத்துக்குரிய விசயமாக வரவேயில்லை. ஆனால், சாதிய ரீதியான ஒடுக்குமுறை நடக்கும்போது, ‘சாதியம் என்பது நிலப்பிரபுத்துவத்திலிருந்து உருவாகுது. நிலப்பிரபுத்துவம் ஒழியும் போது சாதியும் ஒழிஞ்சிரும்’னு சமாதானம் சொல்லி, எப்பவும் தப்பிச்சிட்டுப் போனதும் கிடையாது. தஞ்சாவூரிலே கம்யூனிஸ்ட் தோழர்கள் விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டுற வேலையை மட்டும் செய்துகிட்டிருக்கல்ல, சாதிரீதியான ஒடுக்கு முறை வந்தப்ப, அந்த ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடி இருக்காங்க. அதற்கான இயக்கத்தைக் கட்டியிருக்காங்க. விடுதலைச் சிறுத்தைகளோ, புதிய தமிழகமோ வந்தது இப்பத்தானே!
அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்களெல்லாம் முன்னமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி இருக்காங்க. இல்லைன்னு சொல்லல. ஆனால், இவங்க எல்லாருமே நகரத்தில் குவிந்திருந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியே அதிகமா அக்கறை கொண்டிருந்தார்களே தவிர, கிராமப் புறங்களிலே சாதிய ஒடுக்குமுறையை கையிலெடுத்துப் போராடி னவங்க, -தலித் மக்களுக்குப் பாதுகாப்பா இருந்தவங்க கம்யூனிஸ்டு கள்தான்.
தஞ்சை மாவட்டத்திலே இன்னிக்கு வரைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ‘பறையன் கட்சி’தானே. கம்யூனிஸ்டுகள் சாதிய விசயங்களை கையிலெடுக்காமல் திட்டமிட்டே புறக்கணித்தார்கள்னு தலித் அமைப்புகள் சொல்றதிலே எனக்கு உடன்பாடு இல்லை. பிப்ரவரி யில் டெல்லியில் நடந்த ‘தலித் உரிமை சிறப்பு மாநாடு’ சாதியம் குறித்த இடதுசாரிப் பார்வையை தெளிவாகச் சொன்னது. வர்க்க நீக்கம் (Declassification) செய்து கொள்வதைப் போலவே சாதிநீக்கம் (Decastification) என்பதன் அவசியத்தை இடதுசாரிகள் புரிஞ்சிருக் காங்க. எந்த சாதியில் பிறந்திருந்தாலும் அடுத்தவன் மலத்தை வாரிச் சுமக்கிற அவலத்திலிருந்து மீளத் துடிக்கும் ஓர் அருந்ததி யனாக தன்னை உணருகிற ஒருவன்தான் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும்.
கன்னட பார்ப்பனரான சீனிவாசராவ் போய்தானே தஞ்சாவூரிலே மக்களைத் திரட்டுறாரு. அவரு சாதியைக் கைவிட்டுட்டுத்தானே போறாரு. அவருடைய நடவடிக்கைகளில் எந்தெந்த பார்ப்பனக் குணம் வெளிப்பட்டதுன்னு இன்னிக்குப் போய் மைக்ராஸ்கோப் வைச்சிகிட்டு பார்க்க முடியாது. அவர் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய காரியம் தன்னுடைய சொந்த சாதிக்குரிய செருக்கையோ, அதிகாரத்தையோ நிலைநாட்டுவதற்கு வாழ்க்கையிலே எங்கேயுமே முயற்சி பண்ணல. மக்களோடு மக்களாதான் மல்லுகட்டிகிட்டு கிடந்தாரு. அந்தப் பாரம்பரியம் நமக்கு இருக்குதான்னா, இருக்குது. அவரைப்போல இயக்கத்திலே பலர் செயல்பட்டிருக்காங்க, பல பேரு சாதி மறுப்புத் திருமணம் செய்திருக்காங்க. பல பேரு சீர்திருத்தத் திருமணம் செய்திருக்காங்க. கடவுள் மறுப்புக் கொள்கையை பலபேரு கடைபிடிச்சிருக்காங்க. நான் 22 வருசமா இந்த இயக்கத்தைப் பார்த்துகிட்டு இருக்கேன். சாதி ரீதியான கண்ணோட்டம் என்பது நிறைய தோழர்கள்கிட்டே இல்லே. ஆனாலும், இயக்கத்துக்குள்ளே வர்றவன், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் எழுதினது பூராவும் படிச்சி, தெளிவாகியா வர்றான்? அப்படி சில பேரு தத்துவார்த்த புரிதலோடும் பிடிப்போடும் வந்திருக்கலாம். அப்படிப்பட்டவங்க ரொம்பக் குறைவு. பெரும்பாலானவர்களுக்கு அவர்களது தனிப்பட்ட அல்லது சொந்த ஊர் சார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து, இயக்கத்தோட தொடர்பு ஏற்படுது. அந்தத் தொடர்பின் வழியாகத்தான் இயக்கத்துக்குள்ளே வர்றாங்க. சாதி யாதிக்க, பாலாதிக்க உணர்வுகளிலிருந்து விடுபட்டுத்தான் வர்றாங் கங்கிறதைத் துல்லியமா கண்டறிவதற்கான அளவுகோல் எதுவும் நம்மிடம் இல்லை. இயக்கத்திலே வேலை செய்கிறபோது, அனுபவ ரீதியாக சில விசயங்களைக் கத்துக்கிறாங்க. சிலதை கைவிடுறாங்க. அப்படி கைவிடக்கூடிய விசயங்களாகச் சாதியை அவனுடைய சொந்த வாழ்க்கையில் நடைமுறையிலிருந்துதான் கைவிடணும்.
தான் இன்ன சாதிக்காரன் என்கிற அகங்காரமோ, தாழ்வு ணர்ச்சியோ அவன் மனதிலிருந்து விடுபட்டாலொழிய அவன் சாதியற்றவனாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. அந்த இடத்தை ஒருவன் அடைவதற்கு இயக்கம் உதவி செய்வதாக நான் நினைக்கிறேன்.
அதேசமயம், சாதியை எல்லாருமே கைவிட்டாங்களான்னா, நான் இல்லைன்னுதான் சொல்வேன். இன்னமும் பெரும்பாலான குடும்பங்கள்ல சடங்கு மறுப்பு, சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கலே. அப்படின்னா இவன், இன்றைய அரசியல் சூழலில் தன்னை ஒரு இடதுசாரி அரசியலுக்கு ஒப்புக் கொடுத்தவனாக இருக்கிறான்; பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மாற்றி அமைத்து புதிய சமுதாயத்தை உருவாக்கணும்கிறதிலே உடன்பட்டு இருக் கிறான்; ஆனா, பண்பாட்டு ரீதியான புரிதல்ல, தன்னுடைய சொந்த வாழ்க்கையின் கலாச்சார நடவடிக்கையிலே, ஒரு புரட்சி கரமான ஆளாக மாறுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள் ளாத ஒரு பலகீனம் இருக்கு. அந்த இடத்திலே அவர்களை பயிற்று விப்பதற்கான ஒரு கல்வி தேவைப்படுது. சாதி ரீதியான உணர்வை கைவிடுவதற்கு இயக்கம் உதவி பண்ணுது, ஊக்குவிக்குது. ஆனால், தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லைன்னு நான் கருதுறேன். அதற்குத் தனி கவனம் எடுத்து செய்யவேண்டிய முயற்சி தேவைப் படும்.
படித்த, வேலையிலிருக்கிற தலித்துகளில் சிலர், இந்தக் காலத்திலும் தங்களை சாதிய ரீதியாக வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைந்து வாழ்கிற சூழல் இருக்கிறது. இது பற்றி நீங்கள் ‘சுயவிலக்கம்’ என்கிற கவிதையிலே எழுதி யிருக்கீங்க. அவர்கள் எதிர்கொள்கிற சமூகச் சிக்கல் எத்த கையது?
அவன் பாரம்பரியம் என்பது, அவன் நினைத்து, சந்தோசப் பட்டு, மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ளக்கூடியதாக இல்லை. பிற சாதியினர் தங்கள் சாதியை இயல்பாக சொல்லிக் கொள்வதைப் போல, தைரியமோ, பெருமித உணர்ச்சியோ தலித் சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு இருக்கிறதில்லை. தன்னுடன் இதுவரை சகஜமாக பழகிக்கிட்டுருக்கிறவன், தன் சாதி தெரிந்தபிறகு இனிமேல் அப்படி பழகுவானா என்கிற பயம் அவனுக்கு வந்துடுது. அந்தப் பயம் அவன் உருவாக்கிக்கொண்டது கிடையாது. இந்தச் சமுதாயம்தான் அவனுக்கு இந்தப் பயத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கு. உண்மையிலேயே ரொம்ப நெருக்கமா பழகிக்கிட்டிருக்கிறவன்கூட இவன் தாழ்ந்த சாதின்னு தெரிஞ்சவுடனே இவன்கிட்டேயிருந்து விலகி நிற்க ஆரம்பிக்கிறான். இப்படி, தன்னிடமிருந்து ஒதுங்கிக் கொள் வார்கள், தன்னை ஒதுக்கி வைப்பார்கள் என்கிற பயம் இருக்கே, அது மிகக் கொடூரமானது. அப்படி ஒதுக்கி வைத்தால் இந்தச் சமூகத்தில் தான் எப்படி சுதந்திரமாகப் புழங்குவது என்கிற அச்சத்தில், அவன் தன்னைத் தானே மறைச்சிக்க முயற்சிக்கிறான். ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வான். ஆனால் ஒதுக்கலை, புறக்கணிப்பை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதுதான் மிகப்பெரிய அவமரியாதை. அந்தப் புறக்கணிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாததாலும், ஏற்கனவே அவன் முன்னோர்கள் பட்ட அவமானங்களில் இருந்தும், அவன் தன்னுடைய பூர்வீகம் முழுவதையும் மறைத்துக் கொள்கிறான். அப்படி மறைத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே அவன் உங்களில் ஒருவனாகத் தன்னை இணைத்துக் கொள்ள முடியும் என முயற்சி செய்கிறான். உங்களோடு ஒட்டி உறவாடு றதாலே அவனுக்குப் பெருமை ஒண்ணும் கிடையாது. ஆனால், அதன் மூலம் அவன் ஒரு சராசரி மனுசனா வாழத்தான் முயற்சி பண்றான். ஆனால், அந்த முயற்சியிலும் கூட, ஏதோ ஒரு நேரத்தில் தாம் பிடிபட்டு விடுவோம் என்கிற பயம் அவனுக்குள்ளே இருந்து கொண்டுதான் இருக்கு.
‘புது ஆட்டம்’ என்றொரு கவிதையில், சகல விதங்களிலும் தாழ்ந்தவர்கள் பார்ப்பனர்களே என்பது போன்றதொரு அரசியலை முன்வைத்திருக்கிறீர்களே...?
பார்ப்பனர்கள் தங்களை அறிவில் சிறந்தவர்களாகவும், தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களாகவும் இந்தியச் சமூகத்திலேயே மேம்பட்டவர்களாகவும் கருதிக்கொள்கிற மனோபாவம் இருக்கு. ஒருவன் தன்னை உயர்ந்தவன்னு நினைக்கும்போது அடுத்தவனை தாழ்ந்தவன்னு நினைக்கிற மனோபாவம் வந்துடுது. ஒவ்வொரு சாதிக்காரனும் தனக்குக் கீழே இன்னொருத்தனை தாழ்ந்தவன்னு நினைப்பது இதிலிருந்துதான் தொடங்குது. இடைநிலை சாதிக்காரங்கதானே இன்னைக்கு அடக்குமுறை பண்றாங்கன்னா, அது பார்ப்பனியத்திடமிருந்து வந்ததுதான். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டியிலே “ஒரு தலித் எங்களுக்குத் தலைவராவதா?’’ என்று பார்க்கிற விவகாரம் என்பது, ‘ஒரு சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பனர் வாழக் கூடாது’ன்னு ‘மனு’ சொன்ன விரிவுதான். ஏற்கனவே கட்டமைக் கப்பட்ட அந்த உயர்ந்த நிலையை, அதிகாரத்தை இப்போது கேள்வி கேட்க வேண்டியிருக்குன்னு நினைக்கிறேன்.
தகுதி, திறமை, அறிவு என்பது எது? பார்ப்பனர்களின் உயர்ந்த தகுதியும் திறமையும் அறிவும் எந்த அளவுக்கு நம் சமூகத்து மக்களின் வாழ்க்கைக்குப் பயன்பட்டிருக்கு? உடல் உழைப்புக் கூடாது என்பது அவர்களின் சாத்திர விதி. ஆனால், எந்தச் சமூகத் திலுமே ஒரு மனிதன் வாழ்வதற்கு மிக அடிப்படையான தேவை எல்லாம் உடல் உழைப்பின் மூலமாக ஈட்டக்கூடியதுதான். அந்த உழைப்பை செலுத்தவும் அதற்கான பலனை ஈட்டவும் தேவையான அறிவு எதுவோ அதுதான் இந்தச் சமூகத்தை இன்னிக்கும் உயிர்ப் போடு பாதுகாத்துக்கிட்டிருக்கு. உடல் உழைப்புன்னா மாட்டை ஏரில் பூட்டினால் இழுத்துக்கிட்டு போகிற மாதிரியில்ல. பரம்பரை பரம்பரையா கத்துக்கிட்ட மரபார்ந்த அறிவு அது.
பார்ப்பன அறிவையும் திறமையையும் வைத்துக்கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது. அவர்கள் உண்ணுகிற, உடுத்துகிற, குடியிருக்கிற பயணிக்கிற எதுவும் எதிலிருந்து வருகிறது என்றோ, எந்த வகையான உடலுழைப்பில் அது உருவாக்கப்பட்டது என்றோ கூட அவர்களுக்குத் தெரியாது. அவங்க இப்போ மத்தவங்களைப் பார்த்து, கோட்டாவிலே வளர்ந்தவங்கன்னும், ரிசர்வேசன் பிள்ளைங்கன்னும், கவர்மெண்ட் பிள்ளைங்கன்னும் சொல்றாங்க. உண்மையில் அரசர்கள் காலமாகட்டும், ஆங்கிலேயர் காலமாகட்டும், இன்னைக்கு வரை பார்ப்பனர்களைத்தான் அரசாங்கம் வளர்க்குது. அரசாங்கத்தின் தத்துப்பிள்ளைகளாக அவர்கள்தான் இருந்தார்கள்; இப்பவும் இருக்கிறார்கள்.
அன்னிக்கு மானியங்களும் பிரம்மதேயங்களும் என்றால், இன்னிக்கு ஐஐடியும் ஐடியும் (நமக்கெல்லாம் ஐடிஐ மட்டும்தான்). “நீ என்னைத் தீண்டலையேன்னு எனக்கு ஒன்னும் ஏக்கம் கிடையாது’’ன்னு அவன்கிட்டே சொல்லணும். இதுவரை நீ ஆடின தெல்லாம் போதும் இனிமே வா, புது ஆட்டம் போடலாம். நீ எந்தந்த விதத்திலே உயர்ந்தவன்னு சொல்லு, நான் எந்தெந்த விதத்திலே உயர்ந்தவன்னு சொல்றேன்னு பார்ப்பனர்கள்கிட்டே அந்தக் கவிதை மூலமா சில கேள்விகளை வைச்சிருக்கேன். அவர் களுக்கு வைக்கப்பட்ட கேள்விகளை அவர்கள்தான் எதிர் கொண்டு பதில் சொல்லணும்.
‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ என்றொரு கதையைப் புதுமைப்பித்தன் எழுதியிருந்தார். நீங்களோ, ‘கடவுளும் கந்தசாமி பறையனும்’னு ஒரு கவிதை எழுதி, கடவுளை மாடு அறுக்கவும், மலம் அள்ளவும் விட்டிருக்கீங்களே..?
கடவுள்கிட்டே கந்தசாமிப் பிள்ளை பேச நேர்ந்தால் என்ன பேசுவார் என்பதை புதுமைப்பித்தன் அவர் அனுபவத்திலிருந்தும், அவருக்கான பிரச்னையிலிருந்தும் சொல்லியிருந்தார். அதேபோல், கடவுள்கிட்டே கந்தசாமி பறையன் பேச நேர்ந்தால் என்ன பேசுவார் என்பதை நான் சொல்லியிருக்கிறேன். மனிதர்கள் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள்னு சொல்லப்படுது. அப்படி யிருக்க, பெரும் பகுதி பிள்ளைகளைக் கோயிலுக்கு வெளியே ஏன் நிறுத்தி வைக்கணும் என்கிற கேள்வி கந்தசாமி பறையனுக்கு எழுகிறது. அவன் கடவுள்கிட்டே, “உள்ள வர எனக்குத்தான் தடை. வெளியே வந்து எங்களைப் பார்க்க உனக்கென்ன கேடு?’’ன்னு கோபப்படுறான். கடவுளின் பெயரால் மனுசங்க செய்கிற அட்டூழியத்தை கடவுளே உணர்றார். “பிரிச்சு வைக்கிறதுதானே அவனுங்க குணம். உம்புத்தி எங்கே போச்சு? எம் புள்ளைங்களப் பாக்கறதைத் தடுக்க உனக்கென்னடா அதிகாரம்? னு அவர்களை உதைச்சி வீசிட்டு வெளியே வர வேண்டியதுதானே’’ன்னு கடவுளிடம் கந்தசாமி பறையன் கேட்கிறான். பார்ப்பானின் அடிமை மாதிரி கடவுள் நடத்தப்படுறார். “கடவுளே, எங்களை நீ காப்பாத்துறது இருக்கட்டும். பார்ப்பான்கிட்டே இருந்து உன்னை நீ காப்பாத்திக்கோ’’ என்கிறான். கடைசியில், கடவுள் கோயிலுக்குள் போகாமல், இவன் தொழிலான மாடு அறுக்கவும் மயானம் காக்கவும், மலம் அள்ளவும் சென்று கொண்டிருப்பதாக எழுதி யிருக்கிறேன். பறையனின் கடவுள் அப்படித்தானே இருக்க முடியும்.
மருத்துவமனை பிணக்கிடங்கில் பிணம் அறுக்கிற தொழிலாளரின் வாழ்க்கையை ‘அன்னையா’ கதையிலே சொல்லியிருக்கீங்க. அதேபோல, காலமெல்லாம் கதை சொல்லிக்கிட்டிருக்கிற உழைக்கும் பெண்கள், தங்களின் வாழ்க்கைக் கதைகளை வெளியே சொல்ல முடியாமல் அவர்களுக்குச் சமூகத்தில் உள்ள தடைகளை மையமா வைச்சு ‘சொல்லி முடியாத கதைகளின் கதை’யைச் சொல்லியிருக்கீங்க. இவ்விரண்டு கதைகளும் படைப்பாளி யின் குரலிலியே சொல்லப்பட்டிருக்கு. அவை உண்மையில் நீங்கள் எதிர்கொண்ட அனுபவங்களா?
பத்து வருசத்துக்கு முன்பு இங்கே (ஓசூர்) அரசு மருத்துவ மனை பின் பக்கத்திலேதான் குடியிருந்தேன். காலையிலே ஐந்து மணி போல எழுந்து தினமும் டீ குடிக்க வருவேன். அப்போ, மார்ச்சுவரியிலே வேலை செய்கிற ஒருத்தர் கருத்த நெடிசலான ஆளு. எப்பவும் காக்கிச் சட்டை, காக்கி டிராயரோடதான் இருப்பாரு. ராத்திரி குடியினாலே கண்ணெல்லாம் செவந்து போயிருக்கும். அவரும் டீக்கடைக்கு வருவார். குடிச்சதால வயிறு எரியும்போல. தண்ணிய வாங்கி மடமடன்னு குடிப்பாரு. அவரின் அந்தத் தோற்றமும், தினமும் அவரைப் பார்க்கிறபோது ஏற்படுகிற உணர்வும் என்னை ரொம்ப பாதிச்சது. அவரை மையமா வைச்சு அவர்களைப் பற்றி நான் அறிந்த விசயங்களைக் கொண்டு ‘அன்னையா’ கதையை எழுதினேன். போஸ்ட்மார்ட்டத்திலேகூட ரொம்ப பிரச்சினைக்குரியதைத்தான் டாக்டர்கள் செய்வார்கள். மத்ததெல்லாம் டாக்டர் ‘டிக்டேட்’ பண்ணுவதோடு சரி, பிணத்தை இவருதான் அறுப்பாரு. உடைப்பாரு. எனக்கு இதப் பார்த்தா கடுப்புதான் வரும். லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து டாக்டராக்கி, போஸ்ட் மார்ட்டம் பண்றான்னு அனுப்பினா, அவன் நின்னுகிட்டு டிக்டேட் பண்றான். ஒன்னுமே படிக்காதவரு போஸ்ட் மார்டம் பண்றாரு. இதைப்போலதான் தகுதி, திறமைன்னு போனவன் 450 கோடி ரூபாய் செலவிலே ராக்கெட் விடுறான். அதுபோய் டுபுக்குன்னு கடல்ல விழுது. என்னடா ஒங்க படிப்பு! ‘அன்னையா’ கதையை இப்போ எழுதியிருந்தா வேற மாதிரி எழுதியிருப்பேன்.
‘சொல்லி முடியாத கதைகளின் கதை’ என்பது என்னுடைய பாட்டியோ, பாட்டியின் அம்மாவோ இன்னைக்கு உயிரோடு இருந்து பேசினால், என்னவெல்லாம் பேசியிருப்பார்களோ, அதுதான் அந்தக் கதை. வெளியில் வேலைக்குப் போவது என்பது தலித் பெண்களுக்கோ, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கோ ஒரு பெரிய பிரச்சினையே கிடையாது. பொதுவாகவே வேலைக்காக வீட்டை விட்டு வெளியில் போவதுதான் அவர்களது வாழ்க்கை. ஆட்களைக் கூட்டிகிட்டு ஊர் விட்டு ஊர் போய் ரோடு போடுறது, ஜல்லி உடைக்கிறது... அந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டது பெரிய விசயமாகத்தான் தோணுது. பெண்கள் பற்றி நமக்கு இருக்கக்கூடிய பார்வைகள் எல்லாத்தையும் சேர்த்து வைத்துதான் அந்தக் கதையை எழுதினேன்.
‘நமப்பு’ன்னு ஒரு கதை. பெண்கள் பேன் பார்ப்பதை மையமா வைச்சு ரொம்ப சுவாரஸ்யமாக எழுதியிருந் தீர்களே...? அது ஒரு புதிய முயற்சி. அது எந்த மாதிரி வரவேற்பைப் பெற்றது?
சமீபத்திலே, ஒரு குறும்பட விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா சிறுகதைகளை சினிமாவா எடுக்கிறதைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார். அப்போ, எழுத்தாளர் திலகவதி, “எந்தக் கதையை வேணுமானாலும் சினிமாவா எடுத்திடலாம். ஆனா, ஆதவனோட பேன் பார்க்கற கதையை மட்டும் எடுக்க முடியாது’’ன்னு சொன்னாங்க.
பேன் பார்க்கிறபோது நடக்கிற சம்பாஷனைகளை உட்கார்ந்து கேட்கணும். அப்படியொரு சுவாரஸ்யம். ஒரு கட்டத்திலே சுவாரஸ்யம் கூடிப்போய் பேன் குத்துறவங்க, எச்சில் ஒழுக குத்து வாங்க. அந்தக் கதை எங்கள் ஊர்ப் பெண்களிடமிருந்து எடுத்து எழுதினதுதான்.
சமீப காலமாக தலித் எழுத்தாளர்கள் தன்வரலாறு எழுதுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்களே...
தன்வரலாறு என்பது மராட்டிய தலித் இலக்கியத்திலிருந்து வந்த முக்கியமான வடிவம். இந்திய, தமிழக வாசகத் தளத்திலே பெரும் பகுதியினருக்கு தலித் வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாது. இந்தியா ஊருனும் சேரின்னும் பிரிக்கப்பட்டிருக்கு. தீட்டு காரணமாக ஊருக்குள் இருக்கிறவன் சேரிக்குப் போகவும், சேரிக்குள் உள்ளவன் ஊருக்குள் போகவும் இங்கே தடையிருக்கு. அப்போ, அவனுக்குத் தெரியாத ஒரு வாழ்க்கை அங்கே இருக்கு. அப்படித் தெரியாத வாழ்க்கையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிற வேலையை தலித் படைப்பாளிகள் மராட்டியத்தில் செய்தார்கள். கற்பனைக் கதைகளில் வரக்கூடிய திருப்பங்கள், பல்வேறு விதமான சுவாரசியங்கள் அவனுடைய சொந்த வாழ்க் கையிலே இருக்கு, கூடுதல் குறைத்தல் இல்லாமல் சொன்னாலே போதும். இன்னொருத்தனின் வாழ்க்கையைப் பார்க்க அனுமதிக்கப்படாத இவன், தன்னை, தான் சார்ந்தவர்களை, சாதிக்காரர் களை, சொந்தபந்தங்களை, முன்னோர்களை எல்லாம் அதுக் குள்ளே கொண்டு வர்றான். அதுவரை தலித் வாழ்க்கையை, அவர் களது பழக்க வழக்கங்களை, கலாச்சார நடவடிக்கைகளை பார்க்காத வாசகர்கள் இதைப் புதிதாக எதிர்கொள்கிறார்கள். இலக்கிய உலகமும் இதனை புதிய வகையாக ஏற்றுக்கொண்டது.
அதன் பிறகு கன்னடத்திலே சித்தலிங்கையாவின் ‘ஊரும் சேரியும்’ வந்தது. தமிழில் பாமாவின் கருக்கு, கே.ஏ.குணசேகரின் வடு... இப்படி சில வந்திருக்கின்றன. ஆனாலும், தன் வரலாறாகத் தான் எழுதிப் பார்க்கணும் என்கிற அவசியம் கிடையாது. அந்த வகை கைகொடுத்தால் அந்த வகையில் சொல்லலாம். இல்லேன்னா, வேறு வடிவங்களில் சொல்லிப் பார்க்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடம் ஒரு இலக்கிய மரபு இருக்கு. அவர்கள் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் பாட்டு பாடிகிட்டும், கதை சொல்லிகிட்டும் வாழறாங்க. அதையெல்லாம் வாய்மொழி யாகப் பதிவு பண்ணனும். ஆங்காங்கே சில முயற்சிகள் நடக்குது. அதெல்லாம் போதாது. மக்களின் வாழ்க்கையை உடனிருந்து பார்க்கக்கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்கணும்னு விரும்பக் கூடிய அல்லது தங்களுடைய வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. உண்மையான வரலாறைச் சொல்லணும்னு நினைக்கக்கூடிய ஒவ்வொருத்தரும் அந்தப் பணியைச் செய்யணும்.
ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் பௌத்தத்தை வலியுறுத்து கின்றனவே...
எனக்கு அடிப்படையான பல சந்தேகங்கள் இருக்கு. பௌத்தம் தழைத்தோங்கும் ஜப்பானில் யுத்தவெறியை மட்டுப்படுத்த அதனால் முடியவில்லை. இலங்கையில் அது பேரினவாதமாக வெளிப்படுகிறது. சீனத்தில் பெரும்பான்மைச் சமூகத்தோடு இணங்கி வாழாமல் தலாய் லாமா தலைமையில் அது உலகம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கிறது. பௌத்தம் ஆட்கொண்ட பல நாடுகளில் வறுமையும் விபசாரமும் ஒழியல.
அம்பேத்கரோடு பௌத்தம் தழுவின பத்து லட்சம் பேரோட சமூகநிலை இப்போ என்னவாக இருக்குன்னு தெரியல.
பௌத்தம் தழுவி அரை நூற்றாண்டு ஓடிவிட்டது. இப்போது அவர்களோடு சமூகத்தின் பிற பகுதி எப்படியான உறவு வச்சிருக் குன்னு தெரியணும். அதிகாரம் கிடைக்கிறபோது எந்தவொரு மதமும் ஒரு ஒடுக்குமுறை கருவியாகத்தான் இருக்க முடியும்கிறதை பௌத்தம் எந்த வகையில் மறுக்கிறது,
இதையெல்லாம் தெளிவு படுத்தாமல் எல்லாருக்கும் புத்தர் தாயத்து வழங்க வேண்டுமா என்கிற கேள்வி இருக்கு. ஒரு நாத்திகராகவோ, மதத்தை மறுதலிக் கிறவராகவோ இருந்து அந்த நிலைக்கு தோதானதாக அம்பேத்கர் பௌத்தத்தை தேர்ந்து கொண்டாரான்னு விவாதிக்க வேண்டி யிருக்கு.
கவிதை, சிறுகதையைக் கடந்து இப்போது இசைப் பாட லிலும் கவனம் செலுத்துகிறீர்களே...?
பொதுவாக, பெரும்பாலானவங்க “என்னங்க நீங்க, இன்னமும் சாதி, சாதின்னு பேசிகிட்டிருக்கீங்க. இப்பெல்லாம் எவன்க சாதி பார்க்குறான்’’ என்கிறார்கள். இந்த வார்த்தை என்னை ரொம்ப துன்புறுத்துச்சி. ஒரு பிரச்சாரத்துக்காக பாடல் எழுத நேர்ந்தபோது அந்த வார்த்தைக்குப் பதில்சொல்ற மாதிரிதான் “இப்பல்லாம் எவன்டா சாதிப் பார்க்கிறான்’’ என்கிற ஒரே ஒரு பாடலை எழுதினேன். பிரபலமான அது, ஏராளமான பாட்டு எழுதின மாதிரி பேர் வாங்கிக் கொடுத்துடுச்சி இதற்காக பிரளயன், திருவுடையான் இருவருக்கும்தான் நன்றி சொல்லணும்.
‘புதுவிசை’ இதழ் அனுபவம்..?
கவிஞர் கந்தர்வனைச் சந்திக்கிறதுக்காக 1999இல் புதுக்கோட்டைக்குப் போயிருந்தேன். அவர், “வளர்ந்த என் போன்ற எழுத்தாளர்கள் எழுதுறதுக்கு சிறு பத்திரிகையிலிருந்து வணிகப் பத்திரிகை வரை ஒரு தளம் இருக்கு. ஆனால், புதுசா ஏராளமா வந்துக்கிட்டிருக்கிறவங்க எழுதுறதுக்கு ‘செம்மலர்’ மட்டும் போதும்னு எனக்குத் தோணல. நீ ஏன் ஒரு பத்திரிகைத் தொடங்கக் கூடாது’’ன்னு அவர் கேட்டார். இப்படித்தான் ஒரு கேள்வி போதுமானதாயிருக்கிறது.
அன்று இரவே தென்மாவட்டங்களில் எனக்கு மிகவும் பரீட்சயமான ஷாஜகான், மாதவராஜ், லட்சுமிகாந்தன் இவங்ககிட்டே எல்லாம் பேசினேன். அவங்க ரொம்ப உற்சாகமா நடத்தலாம்னு சொன்னாங்க. கடைசியா, நாங்கள்லாம் சேர்ந்து தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். அவர், “தமிழிலே படைப்பிலக்கியங்கள் வெளிவர்றதுக்கு ஏராளமானப் பத்திரிகைங்க இருக்கு/ சமூகவியல் சார்ந்த பண்பாட்டுத் தளம் சார்ந்த விசயங்களைப் பேசுவதற்கான ஓர் இடதுசாரி அணுகுமுறையிலான பத்திரிகை இல்லை. அப்படி ஒரு பத்திரிகையைக் கொண்டு வரலாம்’’னு ஆலோசனை சொன்னார். அப்படித் தொடர்ந்து ஏழு இதழ்களை கொண்டு வந்தோம். பரவலான கவனத்தைப் பெற்றது. பத்திரி கைகள் பரவலா விற்றுப்போச்சு.
ஆனால், விற்ற நண்பர்கள் பணத்தை அனுப்பல. அதன் பிறகு விசையின் பாக்கியைப் போல பல மடங்கு அவங்க கையில் புரண்டியிருக்கு. ஆனால், அவங் களுக்கு ஏனோ பணத்தை அனுப்ப மனம் வரல. நானும் தமிழ்ச் செல்வனும் மல்லுக்கட்டி பார்த்துவிட்டு நிறுத்தி விட்டோம். பிறகு ரமேஷ் எனும் நண்பனின் உதவியால் இணைய இதழாகக் கொண்டுவந்தோம். பெரியசாமி, சம்பு, சிவா போன்ற நண்பர்கள் உதவியோடு மீண்டும் உற்சாகத்தோடு ‘புதுவிசை’ வருகிறது. தொடர்ந்து வெளிவரும்.
சந்திப்பு : சூரியசந்திரன்
புதிய புத்தகம் பேசுது
ஆகஸ்ட் 2006
கருத்துகள்
கருத்துரையிடுக